Wednesday, 12 August 2015

அத்தை




அத்தை
மகனைத் தந்து மாமியார் ஆனீர்
மருமகள் பதவி எனக்கே தந்தீர்
மகளாய்க் கற்றேன் பெற்றவளிடம்
மணமுடித்துக் கற்றதெலாம் உங்களிடம்
அருகமர்ந்து கேட்டிலேன் பாடங்கள்
ஆங்காங்கு கண்டதே ஏராளம்
'கணவனை சமாளிப்பது எப்படி'
கவர்ந்து படித்தீர் புத்தகம்
தன்னை மாற்றும் உத்தி ஒன்றே
தக்கதென்று, சொல்லாமல் சொல்வீர்
மகனை வளர்த்து ஆளாக்க, உங்களின்
மகத்தான மனம் உணர்ந்தேன்.
என் கணவனான உங்கள் மகன்
என்னென்ன செய்திருப்பார் அறிகிறேன்
எங்கள் மகனான உங்கள் பேரன்
என்னிடம் பழகுதல் காண்கையில்.
தன்னை உருக்கி விதம் விதமாய்
தங்கம் தரும் ஆபரணம் போல்
உற்றார் தங்கள் இலக்கை வெல்ல
உருவம் துறந்து மிளிர்ந்து விட்டீர்
இன்றோ தொட்டீர் அறுபது வயதை!
இன்னும் இன்னும் கற்கத் தயார்!
இந்தப் பாடம் ஒன்றைத் தான்
இனி வரும் மக்கள் கற்க வேண்டும்
உதாரண வாழ்வு, படிப்பில் இல்லை
உடுப்பில் இல்லை பணத்தில் இல்லை
தன்னைக் கரைத்துத் தூணாய் நிறுத்திய
தாய் உள்ளமே அரியதொரு உதாரணம்
வாழ்த்துப் பாட வயதில்லை எனினும்
வணங்கிப் போற்ற விழைகிறேன்
மாதவன் திருவடியில் வேண்டுகிறேன்
மாதரசி உங்களுக்கு சீரான உடல்நலம்.

No comments:

Post a Comment